எம். ஆர். எப்., கூடைப்பந்து போட்டி எம். சி. சி., பள்ளி ‘ சாம்பியன்’
சென்னை,
பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், மாணவரில் எம்.சி.சி., பள்ளியும், மாணவியரில் செயின்ட் ஜோசப் பள்ளியும் முதலிடங்களை பிடித்தன.
எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டுகளை, சேத்துப்பட்டு பள்ளி வளாகத்தில் நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் துவங்கிய, இருபாலருக்கான கூடைப்பந்து போட்டியில், 20க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன. போட்டிள் ‘நாக் – அவுட்’ முறையில் நடந்தன.
மாணவருக்கான அரையிறுதியில், முதல் போட்டியில், எம்.சி.சி., பள்ளி, 61 – 51 என்ற கணக்கில், பி.ஏ.கே., பழனிசாமி பள்ளியையும், மற்றொரு ஆட்டத்தில் டான்பாஸ்கோ பெரவள்ளூர் அணி, 49 – 23 என்ற கணக்கில், பெரம்பூர் டான்பாஸ்கோவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியில், எம்.சி.சி., பள்ளி மற்றும் பெரவள்ளூர் டான்பாஸ்கோ பள்ளிகளும் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பான ஆட்டத்தில், இரு அணிகளும் சமநிலையில் புள்ளிகளை குவித்தன. முடிவில், 53 – 50 என்ற கணக்கில் எம்.சி.சி., பள்ளி முதலிடத்தை தட்டிச் சென்றது.
மாணவியருக்கான இறுதிப் போட்டியில், பெரம்பூர் செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் மயிலாப்பூர் வித்யா மந்திர் பள்ளிகள் மோதின.
அதில், 28 – 22 என்ற கணக்கில் செயின்ட் ஜோசப் பள்ளி வெற்றி பெற்று முதலிடத்தை வென்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்.சி.சி., பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபதாஸ் தினகரன் கோப்பைகளை வழங்கினார்.