பூண்டுக்கு போட்டியாக முருங்கை ஒரு கிலோ ரூ.400க்கு விற்பனை
கோயம்பேடு,
தமிழகத்தில் ‘பெஞ்சல்’ புயல் தாக்கத்தால், வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறின. இதன் காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது.
தினமும் 7,000 முதல் 8,000 டன் காய்கறி தேவையுள்ள நிலையில், நேற்று 4,000 டன் காய்கறிகள் மட்டுமே வந்தன. இதனால், அனைத்து காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளன.
கோயம்பேடு சந்தைக்கு, பெரம்பலுார், ஒட்டன்சத்திரம், தேனி, நெல்லை, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வரத்து உள்ளது.
தற்போது சீசன் முடிந்ததால், முருங்கைக்காய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வரத்து உள்ளது. இதனால், 300 — 400 டன் தேவையுள்ள இடத்தில் நேற்று 50 டன் முருங்கைக்காய் மட்டுமே வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் கிலோ 250 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காய், நேற்று 1 கிலோ, 300 — 400 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை விற்பனையில் ஒரு முருங்கைக்காய் 50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த சில மாதங்களாக பூண்டு விலை எகிறி கிலோ 450 ஆக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், முருங்கைக்காய் விலை ஏற்றம், இல்லத்தரசியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து ரயிலில் முருங்கைக்காய் வருவதால், விலை அதிகரித்துள்ளது. அதேபோல் மழை பாதிப்பால் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. அத்துடன், சாலைகள் சேதமடைந்துள்ளதால், நள்ளிரவில் சந்தைக்கு வர வேண்டிய லாரிகள் அதிகாலை 4:00 — 5:00 மணிக்கு வருகின்றன
இதனால், காய்கறி வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.
– முத்துகுமார்,
சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர்