சாரம் சரிந்து விழுந்து 2 பேர் பலி ‘ கட்டுமான பணியின் போது விபத்து
தாம்பரம்,சேலையூரில், கட்டுமான பணியின்போது, மூன்றாவது மாடியில் இருந்து, சாரம் சரிந்து கீழே விழுந்து, இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சேலையூர் ஐ.ஓ.பி., காலனியில், ஜேக்கப் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணியில், ராம்நாடு பகுதியை சேர்ந்த கனகராஜ், 47, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரூ, 27 ஆகிய இருவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம், மூன்றாவது மாடியில் சென்ட்ரிங் பலகை கழற்றியபோது, எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து, மூன்றாவது மாடியில் இருந்து, இருவரும் கீழே விழுந்தனர்.
படுகாயமடைந்த இருவரையும் சக ஊழியர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், கனகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சுரூ, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.