ரூ.1.40 கோடி நிலமோசடி காரம்பாக்கம் நபர் கைது
ஆவடி, போரூர், கொளப்பாக்கம், வி.ஜி.என்.பத்மா அவென்யூ குடியிருப்பைச் சேர்ந்த ராமசாமி, 42, என்பவர், கடந்தாண்டு செப்டம்பரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில் குறிப்பிட்டு இருந்ததாவது:
கொளப்பாக்கத்தைச் சேர்ந்த மேகநாதன், உறுப்பினர் துரை சேபாலா ஆகியோருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள், கொளப்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகரில் 2,972 சதுர அடி நிலம் விலைக்கு வருவதாக கூறி, உரிமையாளர் ஹேமா சேஷன் என்பவரை, வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் வாயிலாக எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
மேற்படி இடத்திற்கு 1.40 கோடி ரூபாய் விலை பேசி, கடந்த 2022ல், ஹேமாசேஷனிடம் முதல் தவணையாக 30 லட்சம் ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தேன்.
அசல் ஆவணம் குறித்து கேட்டபோது, ஆவணம் தொலைந்து விட்டதாகவும், அயனாவரம் போலீசில் சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் கூறினர்.
மேலும், பிரபாகரன், ஹேமா சேஷனின் மகள் சந்திரா பெயரில் மேற்படி நிலத்தின் தாய் பத்திரம் கொண்டு கிரையம் செய்து கொடுப்பதாக கூறினார்.
இதையடுத்து, சந்திரா அந்த நிலத்தை எனக்கு பொது அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்தார். அதற்காக 1.10 கோடி ரூபாய் ஹேமாசேஷனிடம் கொடுத்தேன்.
இந்நிலையில், நிலத்தில் பிரச்னை இருப்பதாக கூறி பணத்தை திருப்பி கேட்ட போது, பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர். எனவே, என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில், தனிப்படை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பொது அதிகாரம் வழங்கிய சந்திரா என்பவர் போலியான நபர் என்பதும், ஹேமா சேஷனுக்கு மகன் மட்டும் தான் உள்ளார் என்பதும் தெரிந்தது.
மேலும், வழக்கறிஞர்பிரபாகரன், துரை சேபாலா, மேகநாதன் ஆகியோர் கூட்டு சேர்ந்து, ஜெயக்குமார் என்பவர் வாயிலாக ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது. அந்த நிலத்தின் மதிப்பு, 1.40 கோடி ரூபாய்
இதையடுத்து, தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த காரம்பாக்கத்தைச் சேர்ந்த மேகநாதன், 42, என்பவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.