50 சவரன் அதிகாரி வீட்டில் திருட்டு
மாதவரம்: மாதவரம், சாரங்கபாணி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், 40; ஐ.டி ஊழியர். அவரது மனைவி கவிப்ரியா, 38; சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இரு தினங்களுக்கு முன், குடும்ப விழாவிற்கு நகைகள் அணிந்து செல்ல, கவிப்ரியா, பீரோவை திறந்து பார்த்துள்ளார்.
அதில், வைத்திருந்த 50 சவரன் நகைகள் மாயமானது தெரிந்தது. வீடு முழுதும் தேடியும், நகைகள் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின்படி, சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போலீசார், நிபுணர்களை வரவழைத்து நேற்று, கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல், நகை திருடு போனதால், உறவினர்கள் மற்றும் வீட்டிற்கு வந்து செல்வோரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.