பாலாற்றில் ரோம் நாட்டு நாணயம் கண்டெடுப்பு
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி வரலாற்றியல் துறை விரிவுரையாளரும், வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலருமான மதுரைவீரன், செங்கல்பட்டு மாவட்டம், பாலாற்றில் கள ஆய்வு நடத்தினார். அப்போது, ரோம் நாட்டு நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்டம், பாலாறு கடலில் கலக்கும் இடமாக கருதப்படும் வசுவசமுத்திரம் பகுதியில், பொ.யு.பி., 306 – 337 ஆண்டு காலத்தில், ரோமை ஆண்ட கான்ஸ்டான்டைன் எனும் மன்னரின் உருவம் பொறித்த நாணயம் ஒன்றும், தெளிவற்ற நிலையில் மற்றொரு நாணயமும் கிடைத்துள்ளது.
இதிலிருந்து, பல்லவ மன்னர்களின் ஆட்சியில், இங்கு துறைமுகப்பட்டினம் சிறப்பாக இருந்ததையும், இங்கு ரோமானியர்கள் வணிகம் செய்ய வந்து, சென்றதையும் அறிய முடிகிறது.
ஆறுகள் கடலில் கலக்கும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அகழாய்வு செய்தால், வரலாற்றுக்கு வலு சேர்க்கும் புதிய ஆதாரங்கள் கிடைக்கக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.