முருங்கைக்காய் 1 கிலோ ரூ.250க்கு எகிறியது
கோயம்பேடு, முருங்கைக்காய் சீசன் முடிந்து வரத்து குறைந்ததால், ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கோயம்பேடு சந்தைக்கு பெரம்பலுார், ஒட்டன்சத்திரம், தேனி, நெல்லை, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, முருங்கைக்காய் வரத்து உள்ளது.
ஜனவரி முதல் ஆக., மாதம் வரை, முருங்கைக்காய் சீசன் என்பதால், தினமும் 10 லாரி வரை சந்தைக்கு வருவது வழக்கம்.
தற்போது சீசன் முடிந்ததால், முருங்கைக்காய் வரத்து குறைந்து, விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, குஜராத் மற்றும் மஹாராஷ்டிர பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வரத்து உள்ளது.
300 — 400 டன் தேவையுள்ள இடத்தில் நேற்று, 100 டன் முருங்கைக்காய் மட்டுமே வந்துள்ளது.
இதையடுத்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன், கிலோ 160 — 180 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காய், நேற்று ஒரு கிலோ, 200 – 250 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், முருங்கைக்காய் சீசன் முடிந்ததால், வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து, ரயில் மற்றும் விமானம் வாயிலாக முருங்கைக்காய் வருகிறது, என்றனர்.