ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் சோதனை முறையில் க்யூ-ஆர் கோடு மூலம் மது விற்பனை அறிமுகம்

சென்னை: மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் க்யூ- ஆர் கோடு மூலம் மது விற்பனை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுப்பாட்டில்களுக்கு ரூ.10 முதல்ரூ.40 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள்எழுந்த வண்ணம் இருக்கிறது.

அதிகாரிகளும் அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி, கூடுதலாக வசூலிக்கும் கடை ஊழியர்களை பணியிடைநீக்கம் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனாலும், இந்த குற்றச்சாட்டு சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

எனவே, மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க, ‘உற்பத்தி முதல் விற்பனை வரை’ திட்டத்தை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

கூடுதல் வசூல் புகார்: மதுபாட்டில் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலேயே, மதுபாட்டில்கள் மீது, விற்பனை விலையுடன் கூடிய ‘க்யூ-ஆர்’ கோடு ஒட்டப்படும். அந்த மதுபாட்டில்கள், தொழிற்சாலையை விட்டு வெளியேகொண்டு வருவது முதல் மதுபாட்டில்கள் விற்பனையாவது வரை அவை கண்காணிக்கப்படுகின்றன. இதன்மூலம், மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெறுவது தவிர்க்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தவகையில், க்யூ-ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, மின்னணு பரிவர்த்தனையில் வழியாக பணம் செலுத்தி மதுபானங்களுக்கு பில்லை பெறும் வசதியை டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதல்கட்டமாக, ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் தலா 10 கடைகளில் இந்த வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அமல்படுத்தப்படும் என்றும் இதற்காக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் கணினி மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *