தமிழகத்தில் அண்மைக்காலமாக என்கவுன்ட்டர் அதிகரிப்பு: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

நாமக்கல்: தமிழகத்தில் அண்மைக்காலமாக என்கவுன்ட்டர் அதிகரித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில். ‘கந்து வட்டிஒழிப்பு’ மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இங்குள்ள மக்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும், நிதி பற்றாக்குறைக்காகவும் சில தனியார்நிறுவனங்களிடம் கடன் பெறுகின்றனர். கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தாதபோது, இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

எனவே, மக்களை கடன் வலையிலிருந்து மீட்கவும், கந்து வட்டி,மைக்ரோ ஃபைனான்ஸ் குழு கடன்களுக்கான வட்டி விகிதங்களை ஆராய்ந்து முறைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்எழுதியபோதும், உரிய நடவடிக்கை இல்லை. இலங்கையில் தற்போது புதிதாக அமைந்துள்ள அரசிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.
தமிழகத்தில் என்கவுன்ட்டர் அதிகரித்து வருகிறது. இதற்கு காவல் துறையினர் கூறும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மதுவிலக்கு என்ற பெயரில், ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியாது. போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப் பழக்கத்திலிருந்து விடுபடவைத்து படிப்படியாக மதுக்கடைகளை மூட முடியும். தவெக மாநாட்டுக்குப் பின்னர், தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் காத்திருக்கிறது என கூறப்படுவது குறித்து கேட்கிறீர்கள். பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *