எண்ணூர் எண்ணெய் கசிவு தொடர்பாக அபராத தொகை கணக்கிடப்படுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது, மணலி பகுதியில் இருந்த சிபிசிஎல் நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய் படலம் பரவியது. இது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது. சுமார் 20 கிமீ தூரத்துக்கு எண்ணெய் படலம் பரவியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. அப்பகுதிகளுக்கு இரைதேடி பறவைகள் வரவில்லை.
மீன்படி படகுகள், வலைகள் மீது தடிமனான பிசின் போன்ற கரிய நிற பெட்ரோலியக்கழிவு படிந்து பாழானது. அங்குள்ள குடியிருப்பு சுவர்கள், தெருக்கள், நிலங்களில் உள்ள தாவரங்கள் மீதும் எண்ணெய் படலம் படிந்தது. அங்கு பெட்ரோலிய நாற்றமும் வீசியது. இதனால் மீனவர்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.
இந்நிகழ்வு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழுவையும் அமைத்தது. இந்த பெட்ரோலிய எண்ணெய் கழிவுகள் சிபிசிஎஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறியது. பல்வேறு முகமைகள் மூலமாக 2 லட்சத்து 20 ஆயிரத்து லிட்டருக்கு மேல் நீர் கலந்த எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன. குப்பை கழிவுகள் மற்றும் மண்ணுடன் 660 டன் எண்ணெய் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன. எண்ணெய் கசிவால் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ஐஐடி வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் இன்று (செப்.9) விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்சத்யஜித், “எண்ணெய் கழிவை வெளியேற்றிய நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க, சேகரிக்கப்பட்ட எண்ணெய் கழிவுகள் அடிப்படையில் அபராதம் மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் விவரம் விரைவில் தாக்கல் செய்யப்படும்,” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் அக்.24-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.