புது மருமகள் வந்த அதிர்ஷ்டம்: முகேஷ் அம்பானிக்கு ரூ.25,000 கோடி வருவாய்

மும்பை: புது மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் வீட்டுக்கு வந்த அதிர்ஷ்டத்தால் ரிலையன்ஸ் அதிபர் அம்பானி 10 நாட்களில் ரூ.25,000 கோடியை சம்பாதித்துள்ளார். ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண நாளில் மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதம் ஏற்றத்தை சந்தித்தது.

ரிலையன்ஸ் பங்கின் விலை கடந்த ஒரு மாதத்தில் 6.65 சதவீதமும், 6 மாதத்தில் 6.65 சதவீதமும் உயர்ந்துள்ளது. 2024 ஜூலை 12 அன்று ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இடையே ஆடம்பரமான முறையில் திருமணம் நடைபெற்றது. அம்பானி குடும்பத்தின் இந்த திருமணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

புதிய மருமகள் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததன் அதிர்ஷ்டமாக முகேஷ் அம்பானி 10 நாட்களில் மட்டும் ரூ.25,000 கோடியை சம்பாதித்தது தொழில்துறை உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமணத்தை அம்பானி குடும்பம் உலகமே வியக்கும் வகையில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து ஆடம்பரமாக நடத்தினாலும் முகேஷ் அம்பானியின் செல்வம் மட்டும் குறையவே இல்லை. உண்மையில் ஏற்றத்தைத்தான் கண்டுள்ளது. ஆஜ் தக் கணிப்பின்படி, திருமணத்துக்கு பிந்தைய 10 நாட்களில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு தோராயமாக 3 பில்லியன் டாலர் அல்லது ரூ.25,000 கோடி அதிகரித்துள்ளது.

11-வது இடம்: ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் ஜூலை 5 அன்று அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 118 பில்லியன் டாலர் என தெரிவித்தது. இந்த நிலையில், ஜூலை 12-ல் அவரது சொத்து மதிப்பு 121 பில்லியன் டாலராக ஏற்றம் கண்டது. இதன் மூலம், உலகபணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக முகேஷ் அம்பானி தொடர்ந்து தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *