பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் இடம் பெற்றனர்
புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட தடகளஅணியை இந்திய தடகள சங்கம்அறிவித்துள்ளது. இதில் தமிழகவீரர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் வரும் 26-ம்தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை நடைபெறும் இந்தவிளையாட்டு திருவிழாவில் தடகளபோட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட அணியை இந்திய தடகளசங்கம் அறிவித்துள்ளது. இந்தியஅணியில் 17 வீரர், 11 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா மீண்டும் களமிறங்குகிறார்.
ஆசிய விளையாட்டு சாம்பியன்களான அவினாஷ் சேபிள், தஜிந்தர்பால் சிங் தூர், ஜோரி யார்ராஜி ஆகியோருடன் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஒலிம்பிக்கில் டிராக் அன்ட் பீல்டு போட்டிகள் ஆகஸ்ட் 1 முதல் 11-ம் தேதி வரை ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெறுகின்றன.
இந்திய தடகள அணி விவரம்: ஆடவர்: அவினாஷ் சேபிள் (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் ஜெனா (ஈட்டி எறிதல்), தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்), பிரவீன் சித்ரவேல், அபுல்லா அபூபக்கர் (டிரிபிள் ஜம்ப்), அக் ஷ் தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட் (20 கி.மீ. நடைப்பயிற்சி), முகமது அனாஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்), மிஜோ சாக்கோ குரியன் (4X400 மீட்டர்தொடர் ஓட்டம்), சூரஜ் பன்வார்(நடை பந்தய கலப்பு மராத்தான்),சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்).
மகளிர்: கிரண் பஹால் (400 மீ), பருல் சவுத்ரி (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் மற்றும் 5,000 மீ), ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டம்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அபா கதுவா (குண்டு எறிதல்), ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யாராம்ராஜ், பூவம்மா எம்ஆர் (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்), பிராச்சி (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்), பிரியங்கா கோஸ்வாமி (20 கி.மீ. நடை பந்தயம் / நடைபந்தய கலப்பு மராத்தான்).