தொல்லியல், நிலஅளவைகள் துறை கண்காட்சி 24-ந் தேதி வரை நீட்டிப்பு

தமிழ்நாடு நாள் விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கில் வைக்கப்பட்ட தொல்லியல் துறை மற்றும் நில அளவைகள் துறை கண்காட்சி 20-ந் தேதி(இன்று) வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், அந்த கண்காட்சியை வருகிற 24-ந் தேதி வரை தமிழக அரசு நீட்டிப்பு செய்து உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு நாள் விழா நடைபெற்ற தினத்தன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை மற்றும் நிலஅளவைகள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த சிறப்புக் கண்காட்சியினை பொதுமக்கள் இலவசமாக காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கண்டு களிக்கலாம்.

இக்கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரியவகை தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுத்தப் பட்டுள்ளன.

மேலும், சென்னை மாகாணத்தின் பழைய வரைபடங்கள் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், சென்னை மாநில வரைபடம் முதல் தற்போதைய தமிழ்நாடு மாநில வரைபடங்கள் வரையிலான அரிய வகைப் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, இந்த சிறப்புக் கண்காட்சி வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *