முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடக்கிறது.

ராமநாதபுரம், தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று(வியாழக்கிழமை) ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்காக ராமநாதபுரத்தில், தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பேராவூர் அருகே மிக பிரமாண்டமான பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோட்டை கொத்தளம் போன்ற முகப்புடன் இந்த பந்தல் அமைக்கப்பட்டு இருக்கிறது. இன்று காலையில் இருந்தே வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெறும். பிற்பகலில் மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் பேசுகிறார்.
முதல் முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக ராமநாதபுரம் வருகிறார். இன்று காலையில் மதுரையில் இருந்து புறப்பட்டு காரில் வரும் அவருக்கு, ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் இருந்து ராமநாதபுரம் வரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதற்காக அந்தந்த பகுதி நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழாக்களுக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தலைமையில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *