பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை அமைந்தகரை, புல்லா அவென்யூவில் உள்ள திரு.வி.க. பூங்கா, செனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இங்கு வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களை தினமும் காலையில் பஸ் மூலம் கட்டுமான பணி நடக்கும் இடத்துக்கு அழைத்து வந்து, மாலையில் பணி முடிந்ததும் மீண்டும் அவர்கள் தங்கும் இடத்துக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை ஊழியர்களை அழைத்து வந்த பஸ் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மதியம் அந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமானது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த அண்ணாநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக பஸ்சில் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அமைந்தகரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *