ரெயில் நிலையத்தில் ரூ.69½ லட்சம் தங்க நகைகள் பறிமுதல் https://www.dailythanthi.com/News/State/gold-jewelery-worth-rs-69-lakh-seized-at-central-railway-station-745954

சென்னை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெய்பூரில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் 4-வது நடைமேடையில் வந்து நின்றது.

அந்த ரெயிலில் ஏறி சோதனையிட்டபோது பி.3 பெட்டியில் சந்தேகிக்கும்படியான நடவடிக்கையுடன் இருந்தவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர்.

அதில் 1.48 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் கோவை நாடார் 2-வது தெருவை சேர்ந்த லட்சுமணன் (வயது 50) என்பதும், அவர் உரிய ஆவணங்களின்றி தெலுங்கானா மாநிலம் காகழ்நகர் பகுதியில் 1.48 கிலோ எடையுள்ள ரூ.69 லட்சத்து 39 ஆயிரத்து 184 மதிப்பிலான தங்க நகைகளை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படையினர், நகைகளையும், லட்சுமணனையும் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *