திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய நபர் – முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதிய சிறுமி

தொல்லை அளித்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நீதி கேட்டு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.

கன்னாஜ், உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியில், 16 வயது சிறுமி ஒருவர், திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி தொல்லை அளித்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நீதி கேட்டு, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். கன்னாஜின் சிப்ரமாவ் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பள்ளிக்குச் செல்லும் வழியில் சக்லைன் என்ற நபர் தகாத சைகைகளை காண்பித்து தொல்லை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன்னுடைய குடும்பத்தினரிடம் புகாரளித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் அந்த நபரின் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக சிறுமியை அவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர். இதையடுத்து அந்த நபர் தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து உள்ளூர் போலீசாரிடம் புகாரளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் சிறுமியின் குடும்பத்தினர் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதையடுத்து தற்போது கன்னாஜ் காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *