சென்னையில் 20 மணி நேரத்திற்கு பிறகு மெட்ரோ ரெயில் சேவை சீரானது

மெட்ரோ வழித்தடத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக பல ரெயில்கள் நிறுத்தப்பட்டன. சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் சேவையை நாள்தோறும் 80 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இத்தகைய சூழலில், நேற்று காலை 8 மணி அளவில் சென்டிரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரெயில் சேவையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அனைத்து மெட்ரோ ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால், சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கி மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர் வழியாக சென்டிரல் நிலையத்திற்கு சென்றனர். இந்த வழித்தடத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரெயில் என்ற அடிப்படையிலேயே இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்ற். இந்த நிலையில், தொழில்நுட்பக்கோளாறு இன்று அதிகாலையில் சரிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு பிறகு தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *