தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி, கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கடந்த மாதம் 25-ந்தேதி தீர்ப்பளித்தது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 17-ந்தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே, புகையிலை நிறுவனங்களின் சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *