வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து நகை கடை ஊழியர்களிடம் ரூ.68 லட்சம் கொள்ளை

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 42). இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் சுபானி (25), மற்றும் அலிகான் (25) என 2 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரிடம் நகைக்கடை உரிமையாளர் விஸ்வநாதன், சென்னை சவுகார்பேட்டையில் நகை பட்டறையில் ஆர்டர் கொடுத்த நகைகளை வாங்கி வரும்படி கூறி ரூ.68 லட்சத்தை கொடுத்து அனுப்பினார். இருவரும் பணத்துடன் பஸ் மூலம் சென்னை மாதவரம் ஆந்திர மாநில பஸ் நிலையத்தில் நேற்று வந்து இறங்கினர். பின்னர் அலிகானின் உறவினர்கள் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் இருப்பதால் அவர்களை பார்த்துவிட்டு சவுகார்பேட்டைக்கு செல்லலாம் என கூறி இருவரும் ஆட்டோ மூலம் கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு காரில் வந்த 4 பேர், இவர்கள் வந்த ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அலிகானிடம், “நாங்கள் வருமான வரி அதிகாரிகள்” என கூறி அவர்களிடம் இருந்த ரூ.68 லட்சத்தை பறித்து கொண்டு, அலிகானை காரில் ஏற்றிச்சென்றனர். சிறிது தூரம் சென்றவுடன் அலிகானை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு பணத்துடன் தப்பிச்சென்று உள்ளனர். பின்னர்தான் மர்மநபர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நகையை கொள்ளையடித்து சென்றது அலிகானுக்கு தெரியவந்தது.

இதுபற்றி அவர், நகைக்கடை உரிமையாளர் விஸ்வநாதனுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அவர், குண்டூரில் இருந்து சென்னை வந்து கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *