அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது

‘மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 130 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.

தாம்பரம் மாநகராட்சி சார்பில் 24 மணி நேர கட்டுப்பாடு அறை செயல்பட்டது. இங்கு பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகளை இரவு முழுவதும் தாம்பரம் மாநகராட்சி வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஜான் லூயிஸ் தலைமையில் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் கண்காணித்தனர். மாநகராட்சி பகுதியில் இரவு முழுவதும் 2,300 ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 133.5 மில்லி மீட்டர் மழை பதிவானது. பலத்த மழையால் தாம்பரம் காசநோய் அரசு ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கியது.

ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து காசநோய் ஆஸ்பத்திரி உள்ளே செல்லும் பகுதி முழுவதும் மழைநீரால் சூழ்ந்ததால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், டாக்டர்கள், ஊழியர்கள் கடும் அவதிப்பட்டனர். டீசல் மோட்டார் மூலம் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்த நோயாளிகள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.

அதேபோல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் தரைதளம் முழுவதையும் மழைவெள்ளம் சூழ்ந்தது. தரைதளத்தில் இருந்த நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகளிலும் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள நோயாளிகள் மேல் தளத்துக்கு மாற்றப்பட்டனர். தேங்கிய மழைநீர் ேமாட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

தாம்பரம் ெரயில்வே சுரங்கப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மோட்டார்கள் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கனமழை காரணமாக ராஜகீழ்பாக்கம், செம்பாக்கம் ஏரிகளில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேறியதால் செம்பாக்கம் வள்ளல் யூசுப் நகர், அஸ்தினாபுரம், திருமலை நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

பெருங்களத்தூர் இந்திரா நகர், கிழக்கு தாம்பரம் லட்சுமி நகர், சேலையூர் பகுதிகளிலும், அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் பகுதிகளில் தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கியது தாம்பரம் மாநகராட்சி சார்பில் 40 இடங்களில் மோட்டார் மூலமும், 10 பொக்லைன் எந்திரம் மூலமும் மழைநீர் அகற்றும் பணி நடந்தது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் 20 இடங்களில் மரங்கள் விழுந்ததால் மின் வயர்கள் அறுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தது. கீழ்கட்டளை பகுதியில் மரம் விழுந்து மின் கம்பம் சேதமானதால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *