விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த 2 விமானங்களில் பயணம் செய்த ராமநாதபுரம் மற்றும் சென்னையைச் சேர்ந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

பின்னர் 6 பேரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த அட்டை பெட்டிகளை சோதனை செய்த போது அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதில் இருந்த 4 கிலோ 967 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 6 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 267 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *