நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 272 நாட்கள் சிறை – துணை கமிஷனர் பகலவன் உத்தரவு
சென்னை
சென்னை சூளைமேடு அவ்வை நகரைச் சேர்தவர் ராஜ்குமார் (வயது 33). ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் முன்னிலையில் ஆஜரான ராஜ்குமார், திருந்தி வாழ்வதாக உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்தார். அதன்படி அவர் ஒரு வருடம் எந்த குற்றங்களிலும் ஈடுபடக்கூடாது என்று நன்னடத்தை விதிக்கப்பட்டது.
ஆனால் அதை மீறி ராஜ்குமார் குற்ற வழக்கில் சிக்கினார். இதனால் ஒரு வருடத்தில், நன்னடத்தை விதியின்படி செயல்பட்ட நாட்கள் போக, மீதி 272 நாட்கள் பிணையில் வெளிவர முடியாத சிறை தண்டனை ரவுடி ராஜ்குமாருக்கு விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை துணை கமிஷனர் பகலவன் பிறப்பித்தார். பின்னர் ராஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.