சென்டிரல் ரெயில் நிலையத்தில் அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டது

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள 10 அடுக்கு மாடி கட்டிடத்தின் 3-வது மாடியில் வணிக அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் இந்த அலுவலக வளாகத்தின் உள்ளே வித்தியாசமான நிறத்தில் பாம்பு ஒன்று சுற்றித்திரிந்ததை கண்டு அங்கிருந்த பணியாளர்கள் கூச்சலிட்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், பாம்பை உடனடியாக பிடித்தனர். பிடிபட்ட அந்த பாம்பு, ஒரு அரியவகை வெள்ளைநிற நாகப்பாம்பு என்பது தெரியவந்தது

2½ அடி நீளம் கொண்ட அந்த வெள்ளை நிறப்பாம்பினை வேளச்சேரியில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான ரெயில்கள் வருகின்றன. அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக வரும்போது ரெயில்களில் இந்த பாம்பு ஒரு அழையா விருந்தாளியாக ஏறி, சென்னைக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த வெள்ளை நாகங்கள் பிறவி குறைபாடு காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *