சைதாப்பேட்டை – தேனாம்பேட்டை மேம்பாலம் புதிய தொழில்நுட்பம் குறித்து மும்பையில் ஆய்வு

இரும்பு துாண்களை பயன்படுத்தி, நவீன தொழில்நுட்பத்தில், சைதாப்பேட்டை – தேனாம்பேட்டை மேம்பாலத்தை, ஓராண்டுக்குள் கட்டி முடிக்க, நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான துாண்கள் தயாரிப்பு குறித்து, மும்பையில் நேற்று, அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தீவுத்திடல் – கிண்டி கத்திப்பாரா இடையிலான அண்ணாசாலையில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

பண்டிகை, விடுமுறை நாட்களில், சைதாப்பேட்டை – தேனாம்பேட்டை இடையிலான ஏழு சந்திப்புகளை கடக்க, 30 முதல் 35 நிமிடங்கள் ஆகின்றன. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் நெரிசலில் சிக்கி திணறுகின்றன.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, 3.20 கி.மீ., நீளத்திற்கு, உயர்மட்ட மேம்பாலம் கட்ட, 621 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.

மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், குறைந்தபட்சம் 3 நிமிடங்களில் ஏழு சந்திப்புகளை கடக்க முடியும்.

மதுரவாயல் – துறைமுகம் இடையிலான இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொண்டு வரும், மும்பையை சேர்ந்த ஜெ.குமார் என்ற கட்டுமான நிறுவனத்திடம், இப்பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

மண் பரிசோதனை முடிந்து, கட்டுமான பணி துவங்க உள்ளது.

அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைந்துள்ள, 2 கி.மீ., துார பாதை, இந்த மேம்பாலத்தில் கீழ் வருகிறது.

அங்கு, மண்ணின் உறுதித்தன்மை குறைவாக உள்ளது. அதனால், மெட்ரோ ரயில் கட்டுமானங்களை பாதிக்காத வகையில், பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக, ‘ஜியோ சிந்தெட்டிக் லேயர்’ என்ற நவீன தொழிற்நுட்பத்தை, நெடுஞ்சாலைத் துறை பயன்படுத்த உள்ளது. புதிய தொழிற்நுட்பத்தால் மண்ணின் உறுதித்தன்மை அதிகரிக்கும்.

மேம்பாலத்திற்கு கான்கிரீட் முன்வார்ப்புகளுக்கு பதிலாக, இரும்பு துாண்கள் மற்றும் பீம்கள் பயன்படுத்தப்படும்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே வாடாவில் உள்ள ஜெ.குமார் கட்டுமான நிறுவன தொழிற்பட்டறையில், இந்த துாண்கள் மற்றும் பீம்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அப்பணியை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், சிறப்பு அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்டோர், நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

கட்டுமான பொருட்களின் தரம் மற்றும் பலம் குறித்து, கட்டுமான நிறுவன அதிகாரிகள் விளக்கி கூறினர். மேம்பாலத்தை ஓராண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் வகையில், பணிகளை மேற்கொள்ளும்படி, ஒப்பந்த நிறுவனத்திற்கு அமைச்சர் வேலு அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *