பர்மா நகர் தீ மிதி திருவிழா 1,200 நேர்த்திக் கடன்

எண்ணுார், அன்னை சிவகாமி நகர் எனும் பர்மா நகரில், 60 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் – அங்காள ஈஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமியையொட்டி, தீமிதி திருவிழா நடைபெறும்.

அதன்படி, 59ம் ஆண்டு தீமிதி திருவிழா, நடந்தது.

முன்னதாக, பாரதியார் நகர் கடற்கரையில், உற்சவ தாயார் ஆதிபராசக்தி அவதாரத்தில் எழுந்தருளினர். முளைப்பாரி முன் அணிவகுக்க, ஊர்வலம் துவங்கியது.

பின், பக்தர்கள் கடலில் நீராடி, அலகு, ராட்சத வேல், கூண்டு வேல், மணி வேல், துாக்க நேர்ச்சை, தீச்சட்டி ஏந்தி, திருக்கோவில் நோக்கி, மூன்று கி.மீ., துாரம் மருளாடியபடி, பாதயாத்திரையாக வந்தனர். மேலும், ஆண்கள் சிலர் பெண் மற்றும் தெய்வ வேடமணிந்து ஆக்ரோஷமாக ஆடி வந்தனர்.

நிறைவாக, கோவில் மைதானத்தில் தயாராக இருந்த, அக்னி குண்டத்தில் இறங்கி, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

இந்த தீமிதி திருவிழா, எண்ணுார், பர்மா நகர் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 1,200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 20,000க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *