பயனாளிகளுக்கு உடனடியாக வீடு வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவு

கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமம் திட்ட பகுதியில், வீட்டுவசதி வாரியம் வாயிலாக அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இங்கு, 418 வீடுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் கட்டப்பட்டது.

இதில் ஒரு வீடு வாங்குவதற்கு, எஸ்.டி.வி., சந்துரு என்பவர், 2021ல் ஒப்பந்தம் செய்தார். இதற்காக, 1.71 கோடி ரூபாயை, அவர் பல்வேறு தவணைகளில் செலுத்தியுள்ளார்.

இதன்படி, 2022 ஜனவரி மாதம் வீட்டை ஒப்படைப்பதாக வீட்டுவசதி வாரியம் உறுதி அளித்து இருந்தது. ஆனால், அந்த குறிப்பிட்ட காலத்தில், வாரியம், வீட்டை ஒப்படைக்கவில்லை.

இது தொடர்பாக சந்துரு, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணையத்தின் உறுப்பினர்கள், எல.சுப்ரமணியன், எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி மனுதாரர் வீட்டிற்கான விலை தொகையை செலுத்தி உள்ளார். ஆனால், வீட்டுவசதி வாரியம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில், வீட்டை ஒப்படைக்க தவறியுள்ளது.

வீட்டை பெற அவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது. எனவே, தற்போதைய நிலையில், மனுதாரர் கார்பஸ் நிதி, நிலுவையில் உள்ள பராமரிப்பு கட்டணங்களை, மனுதாரர் செலுத்தியவுடன் அவர் பெயரில் விற்பனை பத்திரத்தை வாரிய அதிகாரிகள் பதிவு செய்து கொடுக்க வேண்டும்.

வீட்டின் சாவியையும், மனுதாரருக்கு வாரிய அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *