கோயம்பேடு பூ அங்காடி கட்டுமானத்தில்… குளறுபடி
கோயம்பேடு பூ மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், கட்டுமான ரீதியாக குறைபாடுகள் இருப்பதாக வழக்கறிஞர்கள் குழு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில், தவறை மறைக்க சி.எம்.டி.ஏ., முயற்சிப்பதாக, வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் நெரிசலை தவிர்க்கும் வகையில், கோயம்பேட்டில் காய், கனி, மலர் மொத்த விற்பனைக்கான அங்காடி வளாகத்தை, 1996ல் சி.எம்.டி.ஏ., உருவாக்கியது. இங்கு, 295 ஏக்கர் நிலத்தில், 3,200 கடைகள் கொண்ட அங்காடி வளாகம் செயல்பட்டு வருகிறது.
இதில், மலர்கள் மொத்த விற்பனைக்காக தரைதளம், முதல் தளம் கொண்டதாக தனி அங்காடி வளாகம் கட்டப்பட்டது. இங்கு, மலர் மொத்த விற்பனைக்காக, 470 கடைகள் ஒதுக்கப்பட்டன.
இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாக தரைதளத்தில் தான் அதிகமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. முதல் தளத்தில் பெரும்பாலான கடைகள் பயன்படுத்த முடியாத நிலையில், மூடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வெளியூர்களில் இருந்து கனரக வாகனங்களில் கொண்டு வரப்படும் மலர்களை, முதல்தளத்துக்கு கொண்டு செல்ல முடியாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பூ வியாபாரிகள் சார்பில், துரை என்பவர்கள் உயர் நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான மனுவில், ‘மொத்த விற்பனை அங்காடியின் முதல் தளத்துக்கு வாகனங்கள் செல்வதற்கான சாய்வு தள பாதை முறையாக இல்லை. கட்டுமான நீதியாக காணப்படும் இந்த குறைபாட்டை, சி.எம்.டி.ஏ., சரி செய்து கொடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
இதன் உண்மை நிலவரம் அறிய, இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை, உயர் நீதிமன்றம் அமைத்தது. இக்குழுவினர் அங்காடி வளாகத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கட்டுமான ரீதியாக அதில் குறைபாடுகள் இருப்பதாக, வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சாய்வு தளங்கள் பெரிய வாகனங்கள் பயன்படுத்தும் வகையில் இல்லை என, விசாரணை அறிக்கை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனு:
விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சாய்வு தளங்களின் அளவுகள் தவறாக உள்ளன. குறிப்பாக, காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை தான் விசாரணை நடந்தது.
அப்போது, அதிகமானோர் குவிந்திருக்கும் நேரம் என்பதால், பெரிய வாகனங்களால் மேல் தளத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கலாம். கூட்டம் இல்லாத நேரத்தில், வாகனங்கள் மேல் தளத்துக்கு எளிதாக சென்று வரலாம்.
இங்கு டிரை சைக்கிள் எனப்படும் சிறிய ரக வாகனங்கள் தான் அதிகமாக பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், கனரக வாகனங்கள் வரவேண்டிய தேவையே இல்லை.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தவறை மறைக்க முயற்சி
இதுகுறித்து, பூ வியாபாரிகள் கூறியதாவது:
பூ அங்காடியில் மேல் தளத்திற்கு செல்ல பெரிய வாகனங்களை பயன்படுத்த முடியவில்லை. அதற்கான வசதி இல்லை. அதனால்தான், சிறிய வாகனங்கள் வாயிலாக, அங்காடியில் மேல் தளத்துக்கு பொருட்களை எடுத்து செல்கிறோம்.
இதில், தங்கள் தரப்பு தவறை மறைக்க, விசாரணை அறிக்கையை, சி.எம்.டி.ஏ., குறை சொல்வது நல்லதல்ல. வியாபாரிகள் நலன் கருதி, குளறுபடிகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.